Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சென்னை நபர் ஒருவரை, பிரதமர் மோடி குறித்து அவதூறு பதிவிட்டதால் கைது செய்த உத்திர பிரதேச போலீசார் என்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. கூடவே, குறிப்பிட்ட நபர் ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்பது போன்றெல்லாம் செய்திகள் பரவி வருகின்றன.
தமிழ்நாடு தலைநகர் சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர், பிரதமர் மோடி குறித்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்ததாகவும், அதனால் அவரை உத்திர பிரதேச காவல்துறையினர் சென்னையில் வைத்தே அதிரடியாக கைது செய்ததாகவும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாரிதாஸ் கைதினைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு சிஆர்பிசி சட்டத்தைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களில் வழக்கு தொடர்ந்து தமிழக திமுகவினரைக் கைது செய்ய முடியும், 17 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது என்பதாக மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், “பிரதமர் மோடி குறித்து அவதூறு சென்னை நபரை தட்டி தூக்கிய உத்திரபிரதேச போலீசார். பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய நபரை சென்னையில் வீடு புகுந்து உத்திரபிரதேச காவல்துறை கைது செய்தனர்” என்கிற நியூஸ் கார்டும் அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் திமுகவைச் சேர்ந்தவர், தமிழகத்தில் உத்திர பிரதேச காவல்துறையினர் அதிரடி என்றெல்லாம் இடுகைகளும் வைரலாகின்றன.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read:
Also Read: டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரைச் சூட்டியுள்ளதா ஒன்றிய அரசு?
சென்னை நபரை, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதால் கைது செய்த உபி காவல்துறை என்று பரவும் நியூஸ் கார்டு மற்றும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட செய்தியை பாஜக ஆதரவாளர்கள் பலரும் தவறான இடுகைகளுடன் பகிர்ந்து வருகின்ற நிலையில் குறிப்பிட்ட செய்தி வெளியான ஒரே தேசம் என்கிற செய்தித்தளத்தில் ஆராய்ந்தோம். கடந்த 12 ஆம் தேதியன்று இந்த செய்தியை பதிவிட்டுள்ளனர். அதில், அண்ணாமலை பேசியதை மேற்கோள் காட்டி, இந்நிலையில் உபி போலீசார் தமிழகத்தில் ஒருவரை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அப்படிப்பட்ட சம்பவம் இந்த மாதம் நடந்துள்ளதா என்று நாம் ஆராய்ந்தபோது உண்மையில் வைரலாகும் சம்பவம் நடைபெற்றது கடந்த ஆகஸ்டு, 2021 என்பது நமக்குத் தெரிய வந்தது. பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்களும் இச்செய்தியை ஆகஸ்டு மாதம் வெளியிட்டுள்ளன.
அதன்படி, உண்மையில் கைது செய்யப்பட்டவர் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர் அல்ல. உத்திரபிரதேச மாநிலம், ஜான்பூரைச் சேர்ந்த மன்மோகன் மிஸ்ரா என்கிற அந்த நபர் கடந்த 30 ஆண்டுகளாக சென்னை, மாதவரத்தில் வசித்து வருகிறார்.
வடமாநில தொழிலாளர்களுக்கான ஏஜெண்ட் தொழில் செய்து வந்துள்ளார். பிரதமர் மோடி குறித்து இந்தியில் வீடியோக்களை இவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். மேலும், இவரது கைது நடவடிக்கை குறித்து உத்திரபிரதேச போலீசார் முறையாக தமிழ்நாடு காவல்துறையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டே வந்துள்ளனர். இதுவும் செய்திகளில் பதிவாகியுள்ளது.
சென்னை நபரை, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதால் கைது செய்த உபி காவல்துறை என்று பரவும் நியூஸ் கார்டு மற்றும் செய்தி ஆகஸ்டு மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)