Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விடுத்தை சிறுத்தைகள் கட்சி அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. இக்கூட்டணியில் இக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 இடங்களில் விசிக வென்றது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கின்றது. இந்நிலையில் விசிக திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார் என்று புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுவதாக திருமாவளவன் அறிவித்தார் என்று வைரலாகும் நியூஸ்கார்டை காணும்போதே அது போலியானதுதான் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது.
ஏனெனில் புதிய தலைமுறை நியூஸ்கார்ட்களில் வழக்கமாக பயன்படுத்தும் எழுத்துரு (Font), லோகோ போன்றவை வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்படவில்லை. மேலும் இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்ததாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானதுதான் என்பதை அறிய முடிகின்றது. ஆயினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி சமூக வலைத்தளங்களில் பகிர்வதால் இதுக்குறித்து முறையாக ஆய்வு செய்து, இதன் உண்மைத்தன்மையை விளக்க முடிவு செய்தோம்.
ஆய்வின் முதற்படியாக வைரலாகும் நியூட்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த சனிக்கிழமை (24/09/2021) அன்று சேலம் அருகே கொடி விசிக கொடி கம்பம் நடும் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் போலீசார் விசிகவினர் மீது தடியடி நடத்தினர். இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்ததோடு, செப்டம்பர் 29 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இத்தகவலை புதிய தலைமுறை நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.
அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனைத் தொடர்ந்து புதிய தலைவரின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர், “இது தவறான தகவல், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை” என்று பதிலளித்தார்.
இதன்பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம்.
அதற்கு அவர், “இது பொய்யான தகவல். நாங்கள் மாவட்டந்தோறும் போராட்டம் அறிவித்ததிலிருந்து, திமுக கூட்டணியிலிருந்து எங்களை பிரிப்பதற்காக இதுபோன்ற பொய் செய்திகளை மாற்றுக் கட்சிகள் பரப்பி வருகின்றனர்.” என்று விளக்கமளித்தார்.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காணும்போது திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.
திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Vanni Arasu Testimonial
Puthiya Thalaimurai Digital Head Testimonial
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
April 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2025
Ramkumar Kaliamurthy
April 2, 2025