கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடிக்கின்றார் என்று நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு மேல் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.கவிலிருந்து விலகிய இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக நின்றார்.
விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க சார்பாக ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவும் அ.தி.மு.க சார்பாக விருகை ரவியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கவிஞர் சினேகனும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக ராஜேந்திரனும், தே.மு.தி.க சார்பாகப் பார்த்தசாரதியும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து நடிகர் மயில்சாமி சுயேட்சையாகப் போட்டியிட்டார்.
இறுதியில், தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா 74,351 வாக்குகள் பெற்று விருகம்பாக்கத்தில் வெற்றி பெற்றார். மயில்சாமிக்கு இத்தேர்தலில் 1435 வாக்குகள் கிடைத்தது.
இதன்பின் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி உள்ளார் மயில்சாமி. இந்நிலையில் கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடிக்கின்றார் என்று மயில்சாமி கூறியதாக ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடிக்கின்றார் என்று நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூறியதாக, ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏபிபி நாட்டின் எடிட்டரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.
அதற்கு அவர்,
“இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட்”
என்று நமக்கு விளக்கமளித்தார்.
இதன்பின் நடிகர் மயில்சாமியைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம்.
அதற்கு அவர்,
“இவ்வாறு ஒரு விஷயத்தை நான் பேசவே இல்லை. பொதுவாகவே இவ்வாறு அநாகரிகமாக நான் பேச மாட்டேன். ஒருவர் குறித்து கருத்து கூறினாலும் அதை மரியாதையாகவே கூறுவேன்.”
என்று பதிலளித்தார்.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது நடிகர் மயில்சாமி அவர்கள் முன்னாள் முதல்வர் குறித்து பேசியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.
Also Read: சசிகலாவும் நடராசனும் சமூக நீதிக்கு எடுத்த நடவடிக்கைகளை கூட திமுக எடுக்கவில்லை என்றாரா சீமான்?
Conclusion
கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடிக்கின்றார் என்று நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூறியதாக பரவும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Actor Mayilsamy’s Testimonial:-
ABP Naadu Editor’s Testimonial:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)