பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்வுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பட்டினப்பிரவேசம் எனப்படும் இந்த நிகழ்வினை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம் என்று மதுரை ஆதீனகர்த்தரான ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இச்சூழ்நிலையில், “மரபாக சைவ வெள்ளாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விழா என்பதால் அண்ணாமலை அவர்களுக்கு பட்டினபிரவேச பல்லக்கை தூக்க அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தாத்தா ஆகவேண்டிய வயதில் தந்தை ஆனது உண்மைதான் என்று கூறினாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
Fact Check/Verification
பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
பாஜக தமிழ்நாடு தலைவரான அண்ணாமலை, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச பல்லக்கு விவகாரத்தில் “ஆதீனத்தை தோளில் சுமக்க நான் நேரில் வருவேன்” என்று பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்தே இந்த நியூஸ்கார்டு வைரலாகிறது என்பது தெரியவந்தது.
எனவே, தருமபுரம் ஆதீனத்தின் சார்பாக இயங்கும் சமூகவலைத்தளப்பக்கத்தில் இப்படி ஏதும் இடம்பெற்றுள்ளதா என்று தேடியபோது அவர் இவ்வாறு கூறியதாக எந்த செய்தியும் இடம்பெறவில்லை.
தொடர்ந்து, பாலிமர் செய்திகளின் நியூஸ்கார்டு வடிவில் இந்த வைரல் நியூஸ்கார்டு பரவுவதால் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் தேடியபோது “குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியானது” என்று அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர். பாலிமர் நியூஸ் தரப்பிலும் இதனை உறுதி படுத்திக்கொண்டோம்.
மேலும், இதுகுறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் முதன்மை செயலாளர் பிரபாகரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “தருமபுரம் ஆதீனம் கூறியதாக பரவுகின்ற இச்செய்தி முற்றிலும் பொய்யானது” என்று விளக்கமளித்தார்.
Conclusion
பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False/Fabricated
Our Sources
Polimer News
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)