திமுக ஆட்சிக்கு வந்ததும் திராவிட முன்னேற்றக் கழக மகளிரணியோடு சபரி மலை செல்வேன் என்று எம்.பி கனிமொழி பேசியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக இரண்டு நாட்களே உள்ளன. ஏப்ரல் 4 ஆம் தேதி, அதாவது நாளை மாலை 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரக் களம் நிறைவடைய உள்ளது.
இதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பிரச்சாரம் முடிவடைந்த பிறகு, தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தப்படக்கூடாது. அது தொடர்பான விளம்பரங்களும் வெளியிடப்படக்கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனால், கட்சிகள் அனைத்தும் கடைசிகட்ட பரபரப்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், திமுக எம்.பியான திருமதி.கனிமொழி அவர்கள், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிரணியுடன் சபரிமலைக்குச் செல்வேன்” என்று பேசியதாக பாலிமர் நியூஸ்கார்டு போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Archived Link: https://archive.ph/qqtjn
Archived Link: https://archive.ph/HqpuU
Archived Link: https://archive.ph/Ialrf
Archived Link: https://archive.ph/iy72Q
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சபரிமலைக்கு மகளிரணியுடன் செல்வேன் என்று திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பேசியதாகப் பரவும் நியூஸ்கார்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய குறிப்பிட்ட அந்த நியூஸ்கார்டு பாலிமர் டிவியுடையது போல் அமைந்ததால், அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். சமீபத்திய செய்தியாக அவர்கள், ’கனிமொழிக்கு கொரோனா தொற்று’ என்று கனிமொழி எம்.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தே செய்தி வெளியிட்டுள்ளனர்.

Link: https://twitter.com/polimernews/status/1378231521216131072?s=20
ஆனால், அவர்கள் சபரிமலை குறித்து கனிமொழி பேசியதாக எந்த நியூஸ் கார்டினையும் வெளியிடவில்லை. மேலும், இதுகுறித்து பாலிமர் செய்தியாளர்கள் மூலமாக குறிப்பிட்ட நியூஸ்கார்டு போலியாக வடிவமைக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்து கொண்டோம்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நான் கோவிலுக்கு செல்லும் வழக்கம் இல்லாதவள். யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் கோவில்களுக்கு செல்லப் போகிறார்கள். நான் எதற்காக செல்லப்போகிறேன்? சபரிமலை குறித்தெல்லாம் நான் பரப்புரையில் பேசவில்லை” என்று நம்மிடம் தெரிவித்தார்.
எனவே, குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியானது; வேண்டுமென்றே எடிட் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெரிய வந்தது.
Conclusion:
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிரணியுடன் நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என்று திமுக எம்.பி கனிமொழி பேசியதாகப் பரவுகின்ற புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Kanimozhi MP
Polimer News: https://twitter.com/polimernews
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)