சிவன் கோவில்களை இடித்துவிட்டு, தமிழகத்தில் புத்த விஹார்களைக் கட்ட திமுக வெற்றி பெற்ற பிறகு விசிக குரல் கொடுக்கும் என்பதாக ட்விட் ஒன்றினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. ஒருபக்கம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் மற்றொரு பக்கம் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டப்படும் மக்கள் கூட்டமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
தேர்தல் தேதியான ஏப்ரல் ஆறும் நெருங்கி வருவதால் கட்சிகள், எதிர்க்கட்சிகளின் மீதான குறைகளை எடுத்துக் காட்டி மக்களிடம் தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகின்றன.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களிலும் வதந்திகளைப் பரப்பி பிரச்சாரம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் அவர்கள், “திமுக வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களை இடித்துவிட்டு புத்த விஹார்களைக் கட்ட விசிக குரல் கொடுக்கும்” என்று ட்விட்டரில் பதிவிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளமான ஷேர் சாட்டில் வைரலாகியது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
சிவன் கோவில்களை இடித்துவிட்டு புத்த விஹாரங்களைக் கட்ட விசிக குரல் கொடுக்கும் என்பதாக தொல்.திருமாவளவன் ட்விட் போட்டது போன்று பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அவரது ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்தோம்.
ஆனால், அதுபோன்ற பதிவு எதையும் அவர் இடவில்லை. மேலும், விசிக கட்சியில் தொல்.திருமாவளவனுக்கு நெருக்கமான ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது ஏற்கனவே வைரலான வீடியோ ஒன்றின் அடிப்படையில், தற்போது தேர்தல் காலகட்டத்தைக் குறிவைத்து இந்த புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில், திருமாவளவன் கோவில்கள் மற்றும் புத்த விஹாரங்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அவருடைய முழுமையான வாதத்தை எடுத்துப் பகிராமல் தங்களுக்கு சாதகமான இடங்களை மட்டும் வீடியோவில் எடிட் செய்து வைரலாக்கியிருந்தனர் சிலர்.
Archived Link:https://archive.ph/BWwH7

Archived Link: https://archive.ph/Mixvt
இந்நிலையில், உண்மையில் திருமாவளவன் சிவன் கோவில்களை இடித்து விட்டு புத்த விஹாரங்களைக் கட்ட வேண்டும் என்று ஏன் பேசினார் என்பது தந்தி டிவி 2017 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் வெளியிட்ட வீடியோவில் இடம் பெற்றிருக்கும், அதனையே கட் செய்து வைரலாக்கியிருந்தனர்.
அந்த உரையில் அவர், “ராமர் கோவில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்றால், வரலாற்றுச்சின்னமான பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவோம் என்பது சரியான வாதம் என்றால், திருப்பதி ஏழுமலையான் இருக்கிற இடத்திலே புத்த விஹாரங்களைக் கட்ட வேண்டும்; திருவரங்கன் படுத்திருக்கும் இடத்தில் புத்த விஹாரங்களைக் கட்ட வேண்டும்; காஞ்சி காமாட்சி கோவில் இருக்கும் இடத்தில் புத்த விஹாரங்களைக் கட்ட வேண்டும். ஏனெனில், இந்தியாவில் இருக்கிற சிவன், பெருமாள் கோவில்கள் ஒரு காலத்தில் பெளத்த சமண கோவில்களாக இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியுமா?” என்று பேசியிருக்கிறார். அந்த வீடியோவை இங்கே இணைத்துள்ளோம்.
குறிப்பிட்ட அந்த வீடியோவின் அடிப்படையில், தற்போது திருமாவளவன் ட்விட் போட்டது போன்ற புகைப்படத்தை மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிய வந்தது.
Conclusion:
சிவன் கோவில்களை இடித்துவிட்டு புத்த விஹாரங்களைக் கட்ட விசிக குரல் கொடுக்கும் என்று தொல்.திருமாவளவன் ட்விட் போட்டதாகப் பரவும் புகைப்படம் போலியாகச் சித்தரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources:
Thol.Thirumavalavan: https://twitter.com/thirumaofficial
Thanthi tv: https://youtu.be/6r5DmnzhEUo
VCK Party
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)