சாதியை மட்டும் தகுதியாக கருதுபவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று திருச்சி சூர்யா குறித்து தமிழக பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழக பாஜகவில் ஓபிசி பிரிவு தலைவராக இருந்தவர் திருச்சி சூர்யா. அண்மையில் இவர் பாஜகவின் சிறுபான்மை அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணை அவதூறாக பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன் காரணமாக திருச்சி சூர்யா கட்சி பொறுப்பிலிருந்து ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்து முழுவதுமாக விலகிக் கொள்கிறேன் என்று திருச்சி சூர்யா நேற்று அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
அவர் வெளியிட்ட டிவீட்டில்,
அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் .
என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறிப்பிட்ட சாதியில் பிறந்ததை மட்டுமே தகுதியாக கருதுபவர்களுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் இடமில்லை என்று அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check/Verification
சாதியை மட்டும் தகுதியாக கருதுபவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று திருச்சி சூர்யா குறித்து தமிழக பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் ஏபிபி நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதா என அறிய, அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அறிய முடிந்தது.
திருச்சி சூர்யா தனது ராஜினாமா குறித்து அறிவித்த டிவீட்டில், “மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும்” என்று தெரிவித்திருந்தார். இதை ஏபிபி நாடு நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.
இந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து ஏபிபி நாடின் ஆசிரியர் சண்முக சுந்தரத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், இத்தகவல் பொய்யானது என்பதை அவரும் தெளிவு செய்தார்.
Also Read: மோர்பி பாலத்தை பிரதமர் பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதா?
Conclusion
சாதியை மட்டும் தகுதியாக கருதுபவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்று திருச்சி சூர்யா குறித்து தமிழக பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Facebook post, from ABP Naadu, on December 06, 2022
Phone Coversation with CTR Nirmalkumar, State President, BJP IT Wing, on December 07, 2022
Phone Coversation with Shanmuga Sundaram, Editor, ABP Naadu, on December 07, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)