டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்த் டிவீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது. இதனிடையே, வரும் 14-ம் தேதியுடன் அமலில் உள்ள ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (11/06/2021) உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவில் நோய்த்தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மீண்டும் டாஸ்மாக் கடைகள் செயல்பட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயமானது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது அதற்கு எதிராக திமுக தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அதே விஷயத்தை திமுக செய்வதால் சென்ற வருட நிகழ்வுகளை அடிக்கோட்டிட்டு பலரும் இந்த உத்தரவு குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து டிவீட் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அந்த ஸ்க்ரீன் ஷாட்டில்,
“இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்”
என்று ரஜினிகாந்த் அவர்கள் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/2yvYW

Archive Link: https://archive.ph/wNHi3
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து ரஜினிகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, டிவிட்டர் அட்வான்ஸ் சர்ச் (Twitter Advanced Search) முறையைப் பயன்படுத்தி அந்த ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலம் குறித்து தேடினோம்.
நம் தேடலில் ரஜினிகாந்த் அவர்கள் பதிவிட்டதாக பரவும் டிவீட் உண்மையானதுதான் என்பதும், ஆனால் இந்த டிவீட் தற்போது பதிவிட்டதல்ல என்பதும் தெரிய வந்தது. உண்மையில் இந்த டிவீட்டை ரஜினிகாந்த் அவர்கள் கடந்த வருடம் அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் மீண்டும் திறந்தபோது பதிவிட்டதாகும்.

இந்த பதிவை ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பதிவிட்டதாக திரித்து விஷமிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
Also Read: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான படிவமா இது?
Conclusion
டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்த் டிவீட் செய்ததாக பரவும் ஸ்க்ரீன்ஷாட், உண்மையில் சென்ற வருடம் ரஜினிகாந்த் அவர்கள் செய்த டிவீட்டின் ஸ்க்ரீன்ஷாட்டாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Twitter Advanced Search:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)