Fact Check
கேரளாவில் 2020 ஆம் ஆண்டு எடுத்த மழை வெள்ள நிவாரண புகைப்படத்தைப் பதிவிட்டதா பாஜக?

கேரளாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மழை வெள்ள நிவாரணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாஜக தவறுதலாக பதிவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீரின் ஆதிக்கம் மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. வருகின்ற தினங்களில் மழையின் தீவிரம் மேலும் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது” என்று தமிழ்நாடு பாஜவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கம் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட அப்புகைப்படங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்டவை என்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/Verification
கேரளாவில் 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிவாரண உதவி வழங்கும் புகைப்படங்களை தமிழக பாஜக பகிர்ந்து வருவதாக பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, பாஜகவின் தகவல் தொடர்பு அணித்தலைவர் நிர்மல் குமார், குறிப்பிட்ட புகைப்படங்கள் உண்மை எனவும், எதிர்க்கட்சியினர் அப்புகைப்படங்களை கேரளாவில் 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்பதாக தவறாக சித்தரித்து வருகின்றனர் என்றும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு கொண்டு பேசியபோது நமக்கு பதிலளித்த அவரது செயலாளர் பிரபாகரன், “குறிப்பிட்ட புகைப்படங்கள் பாஜகவினர் சென்னையில் நிவாரண உதவிகளை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான். OPPO A9 2020 என்கிற மாடல் செல்போனைப் பயன்படுத்து அப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டதால் ஓரத்தில் அதன் வாட்டர் மார்க் இடம்பெற்றுள்ளது. இதனையே திரித்து, அப்புகைப்படங்கள் 2020 ஆம் ஆண்டு கேரள மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டவை என்பதாக பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தார்.
Conclusion:
கேரளாவில் 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிவாரண உதவி வழங்கும் புகைப்படங்களை தமிழக பாஜக பகிர்ந்து வருவதாக பரவும் தகவல் தவறானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)