“கர்நாடகாவில் பர்தா அணிந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிடும் முஸ்லிம் பெண்கள்… போலீசார் வந்து அவர்களைக் கைது செய்தபோது தான், அவர்களனைவரும் மிக மிக தேசபக்தி கொண்ட ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
கர்நாடகாவில் RSS ஆதரவாளர்கள் புர்கா அணிந்துக்கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து, ரிவர்ஸ் சர்ச் முறையை உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில், புர்கா அணிந்துக்கொண்டு மதுபானம் கடத்தியவர்களை போலீசார் கைது செய்ததாக குறிப்பிட்டு, Etikala Eliyas E – News எனும் யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 08, 2020 அன்று இதே வீடியோவானது பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது
தொடர்ந்து தேடியதில், ஈடிவி ஆந்திரப்பிரதேசம் யூடியூப் பக்கத்தில், ஆந்திராவின் கர்னூல் பகுதியில் மதுபானம் கடத்திய பலரை போலீசார் கைது செய்ததாக செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் புர்கா அணிந்து மது கடத்தியவர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த்து.

இதனையடுத்து, ஆந்திரப் பிரதேச டிஐஜி ஃபக்கீரப்பா காகினெல்லியும் இந்நிகழ்வு குறித்து டிவீட் செய்திருப்பதை காண முடிந்தது. “தெலங்கானாவிலிருந்து ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் பகுதிக்கு புர்கா அணிந்திருக்கும் அந்த இளைஞர் சட்ட விரோதமாக மதுபானங்கள் கடத்தியதை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் அவரை பிடித்துள்ளனர். இந்த வழக்கானது 07/08/2020 அன்று கர்னூல் தாலுக்கா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த டிவீட்டில் அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து தேடுகையில் இச்சம்பவம் தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தி ஒன்றையும் ஃபக்கீரப்பா அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் ஏ.எஸ்.பி கௌதமி சாலி புர்கா அணிந்து வந்த நபரின் பெயர் முகமது ஆரிஃப் என்று தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆரிஃப் அவரது நண்பர் சதிஷ் கௌடுடன் பிடிபட்டார் என்று கௌதமி தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாகுவது யாதெனில்,
- வைரலாகும் நிகழ்வு கர்நாடகாவில் அண்மையில் நடக்கவில்லை; அது 2020 ஆம் ஆண்டில் ஆந்திராவில் நடந்துள்ளது.
- பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை; சட்ட விரோதமாக மதுபானங்கள் கடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- அதேபோல் புர்கா அணிந்து வந்தவர் ஒரு இஸ்லாமியர் ஆவார். இச்சம்பவத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
கர்நாடகாவில் RSS ஆதரவாளர்கள் புர்கா அணிந்துக்கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Youtube video from Etikala Eliyas E – News, Dated August 08, 2020
YouTube video from ETV News Andhra Pradesh, Dated August 08, 2020
Tweet, from Dr.Fakkeerappa Kaginelli, Deputy Inspector General (DIG) of Police, Andhra Pradesh, Dated August 16, 2020
Report from India Today, Dated August 16, 2020