Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாஜகவுக்கு சட்டத்தை விட மனுதர்மம்தான் முக்கியம், வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் பற்றி எரியும் என பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

தற்போது ஊடகங்களில் மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயம் பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களின் வேல் யாத்திரை.
எல்.முருகன் அவர்கள் நவம்பர் 6-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 6 வரை ஒரு மாத காலம் வெற்றி வேல் யாத்திரை எனும் பெயரில் சுற்றுப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த யாத்திரையானது திருத்தணியில் ஆரம்பித்து, முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தையும் அடைந்து, பின்பு கடைசியாக திருச்செந்தூரில் முடிவடையுமாறு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கொரானாக் காலத்தில் இவ்வாறு ஒரு நிகழ்வு தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பொதுநல வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசும் வேல் யாத்திரைகக்குத் தந்திருந்த அனுமதியை ரத்து செய்து, இந்நிகழ்வு நடத்த தடை விதித்தது.
ஆயினும் தடையை மீறி எல்.முருகன் அவர்கள் கடந்த 6 ஆம் தேதி வேல் யாத்திரையைத் தொடங்கினார். இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து யாத்திரையை நிறுத்தினர். ஆயினும் அவர் தொடர்ந்து யாத்திரையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில்
“பாஜகவினருக்கு சட்டத்தை விட, ஒழுங்கை விட மனுதர்மமும் வர்ண நீதியும்தான் முக்கியம். வேல் யாத்திரையைத் தடுத்தால் தமிழகம் பற்றி எரியும்.”
என எல்.முருகன் அவர்கள் கூறியதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
மேலும் இப்படமானது தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களின் வெளியிடப்பட்டதாக அதில் இருந்தது.


சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தை உற்று நோக்கி கவனித்தப்போது, அப்புகைப்படத்தில் எடிட் செய்யப்பட்டு, சில விஷயங்கள் மாற்றப்பட்டு, சில விஷயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதான சாத்தியக் கூறுகள் இருப்பதை உணர முடிந்தது.

ஆகவே இதுக்குறித்துத் தெளிவு செய்துக்கொள்ள, இப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். இவ்வாறு செய்ததில் வேல் யாத்திரைக் குறித்து பரப்பப்படும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் எல்.முருகன் அவர்கள்,
“பா.ஜ.கவினர் சட்டத்தை மீறுபவர்கள் அல்லர் ! தமிழ் மக்களுக்கு இந்து கடவுளுக்கு தமிழ் கடவுளுக்கு தமிழ் பண்பாட்டிற்கு தமிழ் மொழிக்கு ஒரு தீங்கு என வரும் போது சும்மா இருக்க மாட்டோம்”
என்றே கூறியுள்ளார். இந்த தகவலையே திரித்து தவறான முறையில் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்த உண்மையை தமிழக பாஜகவின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்திலிருந்து நாங்கள் கண்டறிந்தோம்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும், எடிட் செய்யப்பட்டப் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


வேல் யாத்திரைக் குறித்து எல்.முருகன் கூறியதாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே பரவி வரும் இந்தப் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Facebook Profile: https://www.facebook.com/ithellamthavarunga/photos/a.100378144949683/235689041418592/
BJP Tamilnadu: https://twitter.com/BJP4TamilNadu/status/1324368400378810368
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 5, 2021
Ramkumar Kaliamurthy
November 19, 2020
Ramkumar Kaliamurthy
September 14, 2020