சட்டசபையில் கொடநாடு பெயரை கேட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையை விட்டு வெளியேறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் தனது உரையில் சில வார்த்தைகளை மட்டும் தவிர்த்து பேசியுள்ளார். இதனையடுத்து இதற்கு கண்டனங்கள் எழும்பிய நிலையில் ஆளுநர் பாதியிலேயே அவையை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்த நிலையில், கொடநாடு என்ற வார்த்தையை முதல்வர் ஸ்டாலின் வாசித்ததாலேயே எதிர்க்கட்சி தலைவர் வெளியேறியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இத்தகவலை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் உட்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநரின் செயலை ஒரு தமிழனாக ஆட்சேபிக்கிறேன் என்றாரா பாஜகவின் நயினார் நாகேந்திரன்?
Fact Check/Verification
சட்டசபையில் கொடநாடு என்ற பெயரை கேட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையை விட்டு வெளியேறியதாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் வீடியோவில் தந்தி தொலைக்காட்சியின் இலட்சினை (லோகோ) காணப்பட்டதால் தந்தி தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் “முதல்வர் ஸ்டாலின் பேசும் போது விறுவிறுவென வெளியேறிய ஈபிஎஸ் – பின்னாலேயே சென்ற ஓபிஎஸ்” என்ற தலைப்பிட்டு தந்தி தொலைக்காட்சி வீடியோ ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட காட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால் ஆடியோ வேறுபட்டிருந்தது. ‘பேரவையில் மிகவும் கண்ணியமாக கண்ணியத்தோடு..’ என்ற வார்த்தைகளை முதலமைச்சர் படிக்கும்போது எடப்பாடி பழனிசாமி அவையை விட்டு வெளியேறுவதாக அந்த வீடியோவில் காணப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் வைரலாகும் வீடியோவில் காணப்படும் வாசகங்களை எப்போதாவது பேசியுள்ளாரா என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் ‘நேரடியாக மோதிக்கொண்ட ஸ்டாலின் – ஈ.பி.எஸ் | Kodanad CCTV எங்க போச்சு?’ என்று தலைப்பிட்டு ஐ தமிழ் நியூஸ் என்ற யூடியூப் பக்கத்தில் செப்டம்பர் 10, 2021 அன்று பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றை கண்டறிந்தோம்.
இவ்வீடியோவில் முதலமைச்சரும் எதிர்கட்சித்தலைவரும் எதிரெதிரே பேசிய வாதம் இடம்பெற்றிருந்தது. அதில் ஒரு நிமிடம் 50 நொடியில், வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருந்த ‘கொடநாடு எஸ்டேட் ஏதோ சாதாரண இடமல்ல..’ என்ற வார்த்தைகளை முதலமைச்சர் பேசியிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில், 2021 செப்டம்பரில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசிய வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் பிரித்து, தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி வெளியேற்ற வீடியோவுடன் இணைத்து தவறான ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.
Also Read: ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியபோது அதிகாரமாக அமர்ந்திருந்தாரா முதல்வர் ஸ்டாலின்?
Conclusion
சட்டசபையில் கொடநாடு என்ற பெயரை கேட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையை விட்டு வெளியேறியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Sources
Youtube Video from Thanthi TV dated January 09, 2023
Youtube Video from I Tamil News dated September 10, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)