எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதாக அறிக்கையுடன் கூடிய செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

அதிமுகவில் அதன் பொதுச்செயலாளரான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது தோழியான சசிகலா தன்னை பொதுச்செயலாளர் என்று அறிவித்துக் கொண்டார். எனினும், சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்ற பிறகு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று வரை முறையே இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வருகின்றனர்.
ஆனால், சசிகலா நடராஜன் இன்று வரை தன்னையே அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். அவருடைய அறிக்கைகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்றே அவரது பெயர் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், “அதிமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை. எடப்பாடி அதிமுக எம்.எல்.ஏ பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம்; கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடவடிக்கை” என்று நியூஸ் 7 செய்தி வெளியிட்டதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்தாரா முதல்வர் ஸ்டாலின்?
Fact Check/Verification
எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
நியூஸ் 7 வெளியிட்டது போன்று அச்செய்தி பரவிய நிலையில் அதில் எழுத்துரு மாற்றம், எழுத்துப்பிழைகள் ஆகியவை இருந்தன. மேலும், அதிமுக தரப்பிலும் சரி, சசிகலா தரப்பிலும் சரி குறிப்பிட்ட நியூஸ் கார்டில் இடம் பெற்றுள்ளது போன்ற லோகோ இல்லாத அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதும் உறுதியானது.
சசிகலாவுடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதாக சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து ஓபிஎஸ்-சின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட பலரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட வி.கே.சசிகலா, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவரை அதிமுக பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பிட்ட அறிக்கையில், தொண்டர்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாத வகையில் தனது எஞ்சிய வாழ்நாட்களை அர்ப்பணித்து நிச்சயம் நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவை காப்போம் என்றும், கவலை வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். மற்றபடி, வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற அறிவிப்பு எதனையும் அவர் வெளியிடவில்லை.
தொடர்ந்து, நியூஸ் 7 தரப்பிலேயே குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று தெரிவித்துள்ளனர். அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக நியூஸ் 7 இணை செய்தி ஆசிரியரான சுகிதா சாரங்கராஜீடமும் தொடர்பு கொண்டு இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதிபடுத்திக் கொண்டோம்.
Conclusion
எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)