Fact Check
இப்தார் விருந்து அளித்த இஸ்கான் சாது பங்களாதேஷ் கலவரத்தில் மரணமடைந்தாரா?
இப்தார் விருந்து அளித்த இஸ்கான் சாது நிதிதாஸ் பிரபு இவர்தான். இவர் பங்களாதேஷ் இஸ்கான் கோவில் மீது நடைபெற்ற தாக்குதலில் இறந்துவிட்டார் என்பதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

நமது அண்டை நாடான பங்களாதேஷில் நடந்தேறிய மதவாதத்தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்ததுடன், இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள குமிலா என்கிற பகுதியில் துர்கா பூஜையின்போது இந்துக்களின் கடவுள் பாதங்களில் குரானை வைத்திருந்ததாகப் பரவிய சமூக வலைத்தளக் காட்சிகளைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே, அங்கு இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், அங்குள்ள இஸ்கான் அமைப்பின்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், “பங்களாதேஷ் இஸ்கான் கோவில் மீது சமீபத்தில் நடந்த தாக்குதலில் இறந்த சுவாமி நிதிதாஸ் பிரபு இவர்தான். கடந்த ரமலான் 30 நாட்களும் ரோசாவிற்கு பிறகு இப்தார் ஏற்பாடு செய்து முஸ்லிம்களுக்கு உணவளித்தார். கதையின் நீதி: பாம்புக்கு பால் சார்த்தான். விஷத்தால் மாண்டான்” என்பதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனித் தமிழ்தேசியம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றாரா?
Fact check/Verification
இப்தார் விருந்து அளித்த இஸ்கான் சாது ஒருவர் பங்களாதேஷ் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார் என்பதாகப் பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில் குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கு வங்கம், மாயாப்பூர் என்கிற பகுதியில் இஸ்லாமியர்களுக்காக இஸ்கான் அமைப்பு இப்தார் விருந்து ஒன்றினை நடத்தியுள்ளது. அதுகுறித்த செய்தி யூசிஏ நியூஸ், பிசினஸ் ஸ்டாண்டர்ட் உள்ளிட்ட தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும், ProKerala என்கிற இணையதளத்தில் குறிப்பிட்ட வைரல் போட்டோ உள்ளிட்ட இஸ்கான் நடத்திய இப்தார் விருந்தின் புகைப்படத் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து தற்போதைய தாக்குதல் குறித்த செய்திகளைத் தேடியபோது, இஸ்கான் நோகாலி பேஸ்புக் பக்கத்தில் பிரந்த சந்திர தாஸ் என்பவர் மரணமடைந்துவிட்டதாக பதிவு இடப்பட்டுள்ளது.
தொடர்ந்து,அக்டோபர் 17 ஆம் தேதியன்று பங்களாதேஷ் தாக்குதல் குறித்த செய்தி ஒன்றினை இஸ்கான் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பிட்ட தாக்குதலில் பிரந்த சந்திர தாஸ் மற்றும் ஜத்தன் சந்திர சாகா ஆகிய இரண்டு பக்தர்கள் மரணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வைரல் பதிவில் இருப்பது போன்று நிதிதாஸ் பிரபு என்கிற பெயர் எங்கேயும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
இப்தார் விருந்து அளித்த இஸ்கான் சாது ஒருவர் பங்களாதேஷ் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார் என்பதாகப் பரவுகின்ற தகவல் ஆதாரமற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)