துபாயில் இஸ்லாமியப் பெண்கள், அங்குள்ள மசூதி ஒன்றில் ராம பஜனை பாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நியூஸ்செக்கரின் வாட்ஸ் ஆப் எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு நமது பயனர் ஒருவர் வீடியோவையும், அதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்தையும் அனுப்பி அதன் உண்மைத்தன்மைக் குறித்து கேட்டிருந்தார்.
அந்த விளக்கத்தில்,
“துபாயில் புதிய சகாப்தம்!
முஸ்லிம் பெண்கள் மசூதியில் ராமா பஜனை வழங்கினர். அவர்களின் கணவர்கள் ஷேக்குகள் கைதட்டலை ஆதரித்தனர். இது இந்தியாவில் செய்யப்பட்டால், இஸ்லாம் ஆபத்தில் இருக்கும்.இந்த மகிழ்ச்சியான விஷயத்தை எங்கள் 135 கோடி இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் …
ஜெய் ஸ்ரீராம்”
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பயனர் அனுப்பிய வீடியோ:
துபாயில் இஸ்லாமியப் பெண்கள் மசூதியில் ராம பஜனை பாடியதாகவும், இதனை அவர்களின் கணவர்கள் ஆதரித்து கைத்தட்டியதாகவும் பரப்பப்படும் இத்தகவல் கடந்த சில ஆண்டுகளாவே தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதை நம்மால் காண முடிகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?
Fact Check/Verification
துபாயில் இஸ்லாமியப் பெண்கள் மசூதியில் ராம பஜனை பாடியதாகவும், இதனை அவர்களின் கணவர்கள் ஆதரித்து கைத்தட்டியதாகவும் பரப்பப்படும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இதுத்தொடர்பான கீவேர்டுகளை பயன்படுத்தி இதுக்குறித்து இணையத்தில் தேடினோம்.
இதில் சத்ய சாய் பாபா ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் இவ்வீடியோ ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
இவ்வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் , “பிரசாந்தி நிலையத்தில் ( புட்டபர்த்தியில் அமைந்துள்ள ஆசிரமம்) பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, சிரியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளைச் சார்ந்த பக்தர்கள் அரபி மொழியில் பஜனை பாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பார்க்கும்போது வைரலாகும் வீடியோ துபாயில் மசூதியில் எடுக்கப்பட்டதல்ல, அது இந்தியாவில் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் பாபா ஆசிரமத்தில் எடுக்கப்பட்டது என்கிற உண்மை நமக்கு புலனாகியது.
Also Read: கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்; வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் உண்மையானதா?
Conclusion
துபாயில் இஸ்லாமியப் பெண்கள் மசூதியில் ராம பஜனை பாடியதாகவும், இதனை அவர்களின் கணவர்கள் ஆதரித்து கைத்தட்டியதாகவும் பரப்பப்படும் வீடியோவானது, உண்மையில் இந்தியாவில் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் பாபா ஆசிரமத்தில் எடுக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Sri Sathya Sai Official: https://www.youtube.com/watch?v=2HNoswFHAgQ
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)