குடியரசு தின விழாவில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும் என்று நடிகையும், பாஜக தேசிய கமிட்டி உறுப்பினருமான குஷ்பு கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

73 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கவிருக்கும் அணிவகுப்பில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் உள்ளிட்டோரின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்தி தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் அந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. இந்த சம்பவமானது பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும் குடியரசு தின விழாவில் எங்களின் வ.உ.சி, வேலு நாச்சியார் படங்களை அனுமதிக்காமல் மறுத்த பாரத பிரதமர் மோடிஜிக்கு நன்றி! என்று குஷ்பு கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.



Also Read: தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
குடியரசு தின விழாவில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும் என்று நடிகை குஷ்பு கூறியதாக தகவல் ஒன்று பரவியதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
ஆன்லைன் ஊடகமான கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இந்த தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை கதிர் நியூஸ் வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் கதிர் நியூஸ் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று கதிர் நியூஸ் தரப்பில் வெளியிடப்பட்டிருந்த பதிவையே காண முடிந்தது.
இதேபோல் குஷ்பு அவர்களும் சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை மறுத்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது குடியரசு தின விழாவில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும் என்று குஷ்பு கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது ஊர்ஜிமாகின்றது.
Conclusion
குடியரசு தின விழாவில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும் என்று நடிகையும் பாஜக தேசிய கமிட்டி உறுப்பினருமான குஷ்பு கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)