Fact Check
டெல்லி அரசு பள்ளியில் பாரத மாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுகிறதா?

Claim: டெல்லி அரசு பள்ளியில் பாரதமாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்ட நமாஸ்
Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறாக பரவுகிறது.
டெல்லி அரசு பள்ளியில் பாரதமாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுவதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”*டெல்லி அரசு பள்ளிகளில் இது நடக்கிறது. நமது பாரததாயின் தலையில் இருந்து கிரீடத்தை அகற்றி வெள்ளை துணியை வைத்து நமாஸ் கற்பிக்கப்படுகிறது. இது டெல்லி ஸ்கூல் கேஜ்ரிவால் முதல்வராக உள்ள பகுதி. ராகுல் அமெரிக்காவில் பாக். இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை ஒப்பந்தம் போட்டதே இதற்காக தான். வரும்(2024 ) நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டத்தை வெற்றி பெற விடாதீர்கள். இது நமக்கான ஆபத்து! முடிந்தவரை பரப்புங்கள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சந்திரயான்-3 வெற்றிக்கு கடவுள் வெங்கடாசலபதியே காரணம் என்றாரா நாராயணன் திருப்பதி?
Fact Check/Verification
டெல்லி அரசு பள்ளியில் பாரதமாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுவதாக பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன்முடிவில், வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டது உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ள சிஷூ பாரதிய வித்யாலயா பள்ளியில் என்பது நமக்குத் தெரியவந்தது. எனவே, முதலில் இந்த வீடியோ டெல்லி அரசு பள்ளியில் எடுக்கப்பட்டது அல்ல என்பது நமக்கு உறுதியாகியது.
தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தபோது, கடந்த ஆகஸ்ட், 2022ஆம் ஆண்டு அரவிந்த் சவ்கான் என்கிற டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையாளர் இந்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்து, குறிப்பிட்ட நிகழ்வு ஒரு நாடகம் என்றும் அதன் முழு வீடியோவை எடிட் செய்து ஷேர் செய்து வருகின்றனர் என்றும், அந்த நாடகத்தை மாணவர்களை வைத்து நடத்திய ஆசிரியையின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் பிற மதங்களுக்கு இடையிலேயான மத நல்லிணக்கத்தை மாணவர்களுக்கு போதிக்கும் வகையில் நடத்தப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து விஷமிகள் பரப்பி வருவதாகவும் காவல்துறை அதிகாரி சின்னப்பா என்பவரின் வீடியோவும் இடம்பெற்றுள்ளது.
மேலும், இதுகுறித்து லக்னோ காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களால் நடத்தப்பட்ட முழு வீடியோ சமூக விரோதிகளால் தவறாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. மத நல்லிணத்திற்கு எதிராக பிரிவினையை உண்டாக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான இந்த நாடக வீடியோவில், அனைத்து மதத்தினரின் நம்பிக்கைகளும் பாரத மாதாவில் அடக்கம் என்பதாக அனைத்து மத சின்னங்களுடன் நாடகம் நடத்தப்பட்டுள்ளது. அதில், இஸ்லாமிய மத சின்னங்களுடனான பகுதியை மட்டும் வெட்டி டெல்லி அரசு பள்ளியில் எடுக்கப்பட்டதாகப் பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு தெளிவாகியது.
Also Read: Fact Check: இளம்பெண்ணுடன் நடனமாடிய பாதிரியார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
டெல்லி அரசு பள்ளியில் பாரதமாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுவதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from Aravind Chauhan, Dated August 15, 2022
Tweet from Lucknow Police, Dated August 15, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)