Fact Check
உ.பி.யில் கோயில்களில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட இஸ்லாமியர்களை போலீசார் தாக்கினரா?
Claim
உ.பி.யில் கோயில்களில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட இஸ்லாமியர்களை போலீசார் தாக்கினர்.
Fact
இத்தகவல் தவறானதாகும். குஜராத் மாநிலத்தில் பொது இடத்தில் வன்முறையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை போலீசார் அடித்த வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
“உ.பி. மாநில கோயில்களில் பெண்களை இடிக்கவும் , நைசாக காதல் வழியில் வீழ்த்தவும் சென்ற மதவெறி துலுக்க தறுதலைக்கு மப்டி போலீசின் தரமான உபசரிப்பு.!!!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழகத்தில் மீண்டும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
உ.பி.யில் கோயில்களில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட இஸ்லாமியர்களை போலீசார் தாக்கியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் “Viral video: Gujarat police beat up goons in Ahmedabad, leaving netizens ‘satisfied’” என்று தலைப்பிட்டு மார்ச் 15, 2025 அன்று மிண்ட் ஊடகத்தில் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரால் பகுதியில் கத்தி, கைத்தடி உள்ளிட்ட ஆயுதங்களால் பொது மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகனங்களை தாக்கிய குற்றவாளிகளை குஜராத் போலீசார் அடித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் நியூஸ் 18 குஜராத்தி யூடியூப் பக்கத்தில் அகமதாபாத்தின் வஸ்த்ரால் பகுதியில் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்ட 14 குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து துவைக்கப்பட்டதாக மார்ச் 16, 2025 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியில் வெளியிடப்பட்டிருந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவின் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் அகமதாபாத் மிர்ரர், நவ்பாரத் டைம்ஸ், ஃப்ரீ பிரெஸ் ஜர்னல் உள்ளிட்ட ஊடகங்களிலும் இதே தகவலுடன் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்ததது.
தொடர்ந்து தேடுகையில் அகமதாபாத் போலீஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த வன்முறை குறித்து மார்ச் 14 , 2025 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அதில் இந்த வன்முறை சம்பவமானது முன்விரோதம் காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து குஜராத் சமாச்சார் வெளியிட்ட செய்தியில் 14 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நபர்களின் பெயர்களும் அச்செய்தியில் வெளியிடப்பட்டிருந்தது. அப்பெயர்களில் ஒரு இஸ்லாமியப் பெயர் கூட இடம்பெற்றிருக்கவில்லை.

இதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்த அக்மதாபாத் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை ஆராய்ந்தோம். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றவாளிகளின் பெயர்களிலும் இஸ்லாமியப் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தெளிவாகுவது யாதெனில்,
வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடக்கவில்லை; குஜராத்தில் நடந்துள்ளது.
பொது இடத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக அந்த நபர்கள் போலீசார் தாக்கப்பட்டுள்ளனர்; பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டதற்காக அல்ல.
வைரலாகும் வீடியோவுக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
Also Read: அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
உ.பி.யில் கோயில்களில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட இஸ்லாமியர்களை போலீசார் தாக்கியதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். பொது இடத்தில் வன்முறையில் ஈடுப்பட்ட குற்றவாளியை குஜராத் போலீசார் அடித்த நிகழ்வே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Mint, Dated March 15, 2025
Report by News 18 Gujarati, Dated March 16, 2025
Report by Ahmedabad Mirror, Dated March 15, 2025
Report by Free Press Journal, Dated March 15, 2025
Report by Navbharat Times, Dated March 16, 2025
X Post By Ahmedabad Police, Dated March 14, 2025
Report by Gujarat Samachar, Dated March 15, 2025
FIR Copy