Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், பழைய அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு கண்ணீருடன் வெளியேறியதாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தின் அடிப்படையில் புதிதாக 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பணி நியமன ஆணையைப் பெற்ற அர்ச்சகர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவில்களில் பணியைத் துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், “இன்று அதிகாலையிலிருந்து திருச்சி நாகநாதசாமி கோவில் வயலூர் கோவில் மற்றும் சில கோவில்களில் பிராமண அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்க்கு பதில் புதிதாக நியமனமான அர்ச்சகர்கள் பூஜைகள் நடத்தத் துவங்கினர். நீக்கப்பட்ட குருக்கள் அதிர்ச்சியில் கண்ணீருடன் வெளியேறினர் என வலைதள தகவல்கள்” என்கிற ட்விட்டர் ஸ்க்ரீன்ஷாட்டுடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற உத்தரவின்பேரில் தமிழ்நாட்டில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பழைய அர்ச்சகர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கண்ணீருடன் திருக்கோவில்களை விட்டு வெளியேறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட வைரலாகும் ட்விட்டினைப் பதிவிட்டு இருந்த BUSHINDIA என்கிற பதிவர், “பாதிக்கப்பட்ட குருக்கள்கள் சிவாச்சாரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் விசாரணை ஆகஸ்டு 18 விசாரணைக்கு எடுக்கப்படுவதால் அர்ச்சகர்கள் சம்மந்தமான எனது பதிவுகளை நீக்கிவிட்டேன்” என்று மற்றொரு விளக்கப் பதிவினை இட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து, வைரலாகும் செய்தியில் உள்ள புகைப்படம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரப்பில் தொலைபேசியில் கேட்டபோது, அவரது செயலாளர் அப்படி யாருமே பணி நீக்கம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தார். மேலும், இதுகுறித்த அமைச்சரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு லிங்க் ஒன்றையும் நமக்கு அனுப்பி வைத்தார்.
https://twitter.com/i/broadcasts/1vAxRwvrEkgKl?t=6s
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பணி ஆணை மூலம் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கியிருக்கிறோம்.
கோவில்களில் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை; செய்யவும் மாட்டோம்.
இவ்விவகாரத்தில் வீணான வதந்திகளை உருவாக்கி, அரசியல் செய்து SocialJustice-ஐ பாழடிக்க வேண்டாம்.” என்று விளக்கமளித்துள்ளார்.
எனவே, குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இருக்கும் கண்ணீருடன் நிற்கும் அர்ச்சகரின் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் உள்ள அர்ச்சகர், ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது.
கடந்த 2020, டிசம்பர் மாத இறுதியில் ராமதீர்த்தம் கோவிலில் இருந்த 400 வருட பழைமையான ராமர் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கோவிலுக்கு சென்றிருந்தார் சந்திரபாபு நாயுடு.
அப்போது, அவரிடம் குறிப்பிட்ட கோவிலைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் கதறி அழுத புகைப்படமே தற்போது தமிழ்நாடு அர்ச்சகர் புகைப்படம் என்று வைரலாவது நமக்கு உறுதியானது.
அனைத்து பிரிவினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற உத்தரவின்பேரில் தமிழ்நாட்டில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பழைய அர்ச்சகர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கண்ணீருடன் திருக்கோவில்களை விட்டு வெளியேறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
CM M.K.Stalin: https://twitter.com/mkstalin/status/1427538741040586753
YouTube: https://www.youtube.com/watch?v=HoiCUPI5gjQ
Twitter: https://twitter.com/i/broadcasts/1vAxRwvrEkgKl?t=6s
India Today: https://www.indiatoday.in/india/story/lord-rama-idol-vandalised-ramateertham-temple-1754778-2020-12-31
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 1, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 27, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 26, 2025