பள்ளிகளில் இறைவணக்கத்தை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு என்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவின் திரிபு நிலையான ஒமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.
இந்நிலையில், “பள்ளிகளில் இறைவணக்கத்தை தவிர்க்க உத்தரவு. தமிழக அரசு அதிரடி” என்பதாக புகைப்படம் ஒன்றும், அதைத்தொடர்ந்து மதம் சார்ந்தே இறைவணக்கத்தை ஆளும் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கிறது என்பது போன்ற பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி எனப்பரவும் வதந்தி!
Fact check/ Verification
பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தை தவிர்க்க தமிழக அரசு அதிரடி உத்தரவு என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக இதுகுறித்த செய்திகளை ஆராய்ந்தபோது, டிசம்பர் 3 ஆம் தேதியன்று ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை முன்வைத்து சுற்றறிக்கை ஒன்று பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி வகுப்பு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிதல், கூட்டமாக மாணவர்கள் கூடும் வகையிலான நிகழ்வுகளைத் தவிர்த்தல் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முன்னணி செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பள்ளிகளில் இறைவணக்கக்கூட்டம் நடத்தக்கூடாது என்பது குறித்த விளக்கமறிய அமைச்சர் அன்பின் மகேஷ் அவர்களது தரப்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.
குறிப்பிட்ட வைரல் பதிவு குறித்து நமக்கு விளக்கமளித்த அமைச்சரின் செயலாளர்கள், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகள் பள்ளிகள் செயல்படத் துவங்கவிருந்த நிலையில் ஆகஸ்டு மாதமே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றிலேயே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இறைவணக்ககூட்டம் நடத்தக்கூடாது, மாணவர்களுக்கு சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்கிற பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது, ஒமைக்ரான் திரிபு பரவி வருகின்ற நிலையில் ஏற்கனவே வெளியாகிய இந்த முக்கிய கட்டுப்பாடுகளைத்தான் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வலியுறுத்தியுள்ளோம். மற்றபடி, வேறெந்த நோக்கத்திலும் இறைவணக்ககூட்டம் போன்றவை நிறுத்தப்படவில்லை. மேலும், இது தற்காலிகமானதே. குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் காப்பது மட்டுமே எங்கள் நோக்கம். இதனையே மக்களிடையே தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்” என்று விளக்கமளித்தனர்.
Conclusion:
பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தை தவிர்க்க தமிழக அரசு அதிரடி உத்தரவு என்று பரவும் செய்தியில் முழு உண்மை தெரிவிக்கப்படவில்லை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
School Education Department/Ministry officials
SOP For Schools Reopening/26.08.2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)