வானூர் தொகுதியில் விசிக தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர்கள் அவமதிக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களங்களில் பரவி வருகின்றது.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக அணியுடன் கூட்டணி சேர்ந்து சந்திக்கவிருக்கின்றது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த வானூர் தொகுதியும் ஒன்றாகும்.
வானூர் தொகுதியில் விசிக தொண்டர்கள் அவர்களின் தேர்தல் சின்னமான பானையை கையில் எடுத்துக்கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, அப்பானையில் பழைய சோற்றைப் போட்டதால், அங்கு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறி புதிய தலைமுறையின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

Archive Link: https://archive.ph/5NBIY

Archive Link: https://archive.ph/HWSgE

Archive Link: https://archive.ph/keCBX
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
வானூர் தொகுதியில் விசிக தொண்டர்கள் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும்போது விசிக தேர்தல் சின்னமான பானையில் பழைய சோற்றைப் போட்டு அவமதிக்கப்பட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, முதலில் உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தி புதிய தலைமுறையில் வந்ததா என்பதை அறிந்துக் கொள்ள முடிவு செய்தோம்.
இதற்காக புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் இச்செய்தி குறித்துத் தேடினோம். அவ்வாறு தேடியதில் இவ்வாறு ஒரு செய்தி புதிய தலைமுறையில் வந்ததற்கான எவ்வித ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் துறையைத் தொடர்புக் கொண்டு இச்செய்திக் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள்,
“இது போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படச் செய்தி”
என்று நமக்கு பதிலளித்தனர்.
இதன்படி பார்க்கையில், வானூர் தொகுதியில் விசிக தொண்டர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது தெளிவாகின்றது.
ஏற்கனவே வானூர் தொகுதியில் திமுக தொண்டர்கள் விசிக வேட்பாளரான வன்னி அரசு அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றார்கள் என்று வன்னி அரசு அவர்கள் வருந்தியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அத்தகவலை முழுமையாக ஆராய்ந்து அது பொய் செய்தி என நியூஸ்செக்கர் சார்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: வன்னியரசு திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றாரா?
இதனைத் தொடர்ந்து தற்போது இவ்வாறு ஒரு பொய் செய்தி வானூர் தொகுதி குறித்தும், விசிக குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
Conclusion
வானூர் தொகுதியில் விசிக தொண்டர்கள் அவர்களின் தேர்தல் சின்னமான பானையை கையில் எடுத்துக்கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது அவர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puthiya Thalaimurai:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)