Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
News
நீட் பயம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் தனுஷின் உறவினர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார்.
இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இந்நிலையில் நீட் தேர்வு நாளான நேற்று (12/09/2021) தேர்வு பயம் காரணமாக தனுஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் தனுஷின் மரணத்துக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனுஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, “நீட் தேர்வைக் கொண்டு வந்த நீங்கள்தான் என் பிள்ளையின் சாவுக்கு பொறுப்பு” என்று கூறி தனுஷின் உறவினர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மாணவர் தனுஷின் உறவினர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது. மாணவர் தனுஷ் உடலுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். இதுக்குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதில் பயன்படுத்தப்பட்டிருந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
மேலும் வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை நியூஸ் 7 தமிழ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவாக வெளியிட்டுள்ளனர்.
Also Read: 1989 சட்டசபை அமளியில் ஜெயலலிதாவின் நடிப்பை விட கங்கனாவின் நடிப்பு குறைவே என்றாரா ஜெயக்குமார்?
மாணவர் தனுஷின் உறவினர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 17, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 8, 2025
Ramkumar Kaliamurthy
November 7, 2023