ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


இலவசங்களால் நாடு வளராது. ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு தரும் இலவசங்களை நிறுத்த வேண்டும். ஈழத்தமிழர் இலவசங்களை தமிழ்நாடு அரசு தடை செய்யவில்லையென்றால் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்டுகள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Also Read: பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றாரா நயினார் நாகேந்திரன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இக்கருத்தை சீமான் கூறினாரா என்பதை உறுதி செய்ய இதுக்குறித்து தேடினோம்.
சீமான் கடந்த வியாழனன்று (18/08/2022) திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் மத்திய, மாநில இலவசத் திட்டங்களுக்கு எதிராக அவர் பேசி இருந்ததை காண முடிந்தது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று சீமான் பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜனைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். “இது பொய்யான தகவல், இதுபோன்று சீமான் பேசவே இல்லை. இலவசங்களுக்கு எதிராக சீமான் பேசியதால், அச்செய்தியை திரித்து இதுபோன்ற பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது” என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, வைரலாகும் இத்தகவல் ஜூனியர் விகடன் மற்றும் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், இந்நிறுவனங்கள் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என அறிய முற்பட்டோம்.
முன்னதாக தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர்,‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று தெளிவுப்படுத்தினார்.
இதனையடுத்து ஜூனியர் விகடனின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்ததில், அதிலும் வைரலாகும் நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. ஆகவே விகடனின் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஐ.பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என அவரும் தெளிவுப்படுத்தினார்.
Also Read: வாடகை வீட்டிலிருப்பவர்கள் 18% GST செலுத்த வேண்டுமா?
Conclusion
ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False
Sources
NTK’s Youtube video, pubished on 18/08/2022
Phone Conversation with Vinoth, Thanthi TV, and I.Britto, Vikatan on 22/08/2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)