பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணை கண்டு மருத்துவர் கண்ணீர் சிந்தியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிறந்த குழந்தையுடன் தாய் இருக்கும் படத்தையும், ஆண் ஒருவர் மருத்துவ உடையில் அழுவதாக இருக்கும் படத்தையும் இணைத்து, அப்படத்தில் இருக்கும் ஆண் ஒரு மருத்துவர் என்றும், மற்றொரு படத்தில் இருக்கும் தாய் இறந்து விட்டதால் அவர் மனமுடைந்து அழுவதாகவும் கூறி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் அப்பதிவில்,
அந்த பெண் 11 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார், பின்னர் பல மருத்துவ முயற்சிகளுக்குப்பின் அவர் கருத்தரித்தார். ஆனால் துரதிக்ஷ்டமாக அவளின் வயிற்றில் ஒரு கட்டி இருந்தது, நாளாக நாளாக கட்டி கரைந்தது, எல்லாம் நல்லபடியாக தோன்றியது. ஆனால் அறுவை சிகிச்சையின்போது குழந்தை அல்லது குழந்தையின் தாயைக் காப்பாற்றும் என்ற ஒற்றை தெரிவு தெளிவாக இருந்தது.
மருத்துவர்கள் 7 மணி நேரமாக போராடி எவ்வளவோ முயற்சி செய்தாலும் அவர்களால் குழந்தையையும் தாயையும் ஒன்றாகக் காப்பாற்ற முடியவில்லை.
கடைசியில், அவள், தாயானவள் தன் உயிரை பணயம் வைத்து அவளின் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டதை செய்ய டாக்டர் முடிவு செய்தார். குழந்தை பிறக்கின்றது. குழந்தையை தாயிடம் கொடுக்கின்றனர். கடைசியாக குழந்தையை இரண்டு நிமிடங்கள் நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு புன்னகைக்க அவளின் கண்கள் நிரந்தரமாக மூடிக்கொள்கின்றது
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



Also Read: காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணை கண்டு மருத்துவர் கண்ணீர் சிந்தியதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் இதே தகவல் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை அறிய முடிந்தது.
ஆனால் இப்பதிவுகளில் அந்த தாய் 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் தமிழில் வைரலாகும் பதிவில் 11 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இக்கதை உண்மையானதா என உறுதி செய்ய வைரலாகும் புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் ‘Merve Tiritoğlu Şengünler Photography’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘En güzel kavuşma’ எனும் தலைப்பிட்டு தாயும் குழந்தையும் இருக்கும் படம் டிசம்பர் 14, 2015 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. ‘En güzel kavuşma’ என்பதை தமிழில் மொழிப் பெயர்த்தால் ‘அழகான மறு சந்திப்பு’ என்று பொருள் வரும்.
அழுகையுடன் இருக்கும் ஆணின் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்ததில் அப்படமானது ‘ozgemetinphotography’ என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 5, 2017 அன்று azı babalar o kadar güzel yaşıyor ki bu anları. ..Icimden iyi ki baba olmuş diyorum’ என்று தலைப்பிட்டு பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இத்தலைப்பை தமிழில் மொழிப்பெயர்த்தால், ‘சில தந்தைகள் இந்த தருணங்களை அழகாக வாழ்கின்றனர்… இவர் தந்தையாகி விட்டார் என்பதை நான் மகிழ்ழ்சியுடன் கூறிக் கொள்கின்றேன்’ என்பதே பொருளாக வரும்.
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் பதிவில் இறந்ததாக கூறப்படும் தாய் உண்மையில் இறக்கவில்லை என்பதும், மருத்துவர் என்று குறிப்பிடப்படுபவர் மருத்துவர் இல்லை என்பதும், இவ்விரு புகைப்படங்களும் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு இடத்தில் எடுக்கப்பட்டது என்பதும் தெளிவாகின்றது.
Conclusion
பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணை கண்டு மருத்துவர் கண்ணீர் சிந்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
(இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)
Result: Fabricated
Sources
Facebook Page Of Merve Tiritoğlu Şengünler Photography
Instagram Page Of ozgemetinphotography
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)