Fact Check
அடுத்த முறை பிரதமரை நேரில் சென்று வரவேற்பேன் என்றாரா சீமான்?
அடுத்த முறை பிரதமரை நேரில் சென்று வரவேற்பேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னையில் நடந்து வரும் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி தொடர்பான விளம்பர போஸ்டர்களில் பிரதமர் படம் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசின் இச்செயல் தவறானது என்றும், இச்செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மேலும் பிரதமர் மற்றும் குடியரசு தலைவரின் படங்கள் விளம்பரப் படங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,“போஸ்டரில் மோடியின் படம் இடம்பெறாதது பெரும் அவமானம். மோடியை வரச் சொல்லி விட்டு முதல்வர் நேரில் சென்று வரவேற்காமல் அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். அடுத்த முறை பிரதமர் மோடியை நானே நேரில் சென்று வரவேற்பேன்” என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அடுத்த முறை பிரதமரை நேரில் சென்று வரவேற்பேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இக்கருத்தை சீமான் கூறினாரா என்பதை உறுதி செய்ய இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் சீமான் இவ்வாறு ஒரு கருத்தை கூறவே இல்லை என்பதை அறிய முடிந்தது.
எண்ணூரில் கடந்த ஞாயிறன்று (31/07/2022) சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் ஒலிம்பியாட் போஸ்டர் விவகாரம் குறித்து கேள்வி எழுந்தபோது, “நீங்களே பிரதமரை விழாவுக்கு அழைத்து விட்டு, அவருக்கு உரிய மரியாதை தர மாட்டேன் என கூறுவது தவறானது, நீங்கள் அவரை அழைத்தப்பின் எதிரியாக இருந்தாலும் அவரை பண்பாட்டோடு நடத்தி இருக்க வேண்டும். அதுதான் முறை” என்று என்று சீமான் பேசி இருப்பதை காண முடிந்தது.
இதைத் தவிர்த்து, பிரதமரை முதல்வர் நேரில் சென்று வரவேற்காததை கண்டித்தோ, அடுத்தமுறை பிரதமரை நேரில் சென்று வரவேற்பேன் என்றோ சீமான் பேசி இருக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, இத்தகவலானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என்பதை அறிய, தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர்,‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று பதிலளித்தார்.
Also Read: 1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதா?
Conclusion
அடுத்த முறை பிரதமரை நேரில் சென்று வரவேற்பேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False
Sources
NTK’s Youtube video, pubished on 31/07/2022
Phone Conversation with Vinoth, Thanthi TV, on 03/08/2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)