தாய்லாந்தில் ஓம் என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரமாக நீருற்று பறப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“தாய்லாந்தில் ஒரு மலைக்கு அடியில் ஒரு நீர் ஊற்று உள்ளது. இம்மலைக்கு எதிரே உள்ள மலையிலிருந்து *ஓம்* என்ற வார்த்தையை உச்சரித்தால், அந்த மலையை விட நீரூற்று இன்னும் உயரத்தில் பறக்கிறது.
இது புத்த துறவி பிரிவினரால் வடிவமைக்கப்பட்டது. “ஒலி விளைவு கோட்பாடு” இந்த உயர்ந்த நீரூற்று, நீர் மற்றும் ஈர்ப்பு விசையின் எடையை கடந்து, ஒலி அலைகளில் மட்டுமே பறக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால், *ஓம்* என்று உச்சரிப்பதன் மூலம் மட்டுமே இந்த அற்புதமான காட்சி உருவாகிறது. வேறு எந்த வார்த்தையாலும் முடியாதது!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விஜய் பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை கொண்டாடியதாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர்!
Factcheck / Verification
தாய்லாந்தில் ஓம் என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரமாக நீருற்று பறப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மையானதா என்பதை உறுதி செய்ய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இவ்வீடியோ குறித்து தேடினோம்
இத்தேடலில் China Xinhua News எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வடக்கு சீனாவின் ஷான்ஸி பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் சிறுமி ஒருவர் ‘ஆ’ என்று ஒலியெழுப்ப நீரூற்று மேலே வருவதை நம்மால் காண முடிகின்றது.
China Xinhua News-ன் வீடியோவையும் வைரலாகும் வீடியோவையும் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த இரண்டு வீடியோக்களும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

இதனையடுத்து தொடர்ந்து தேடியதில் ஹிமாலயா மியூசிக் ஃபவுண்டன் நிறுவனமானது குரல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய இத்தகைய நீருற்றுகளை சீனாவின் ஆயிரம் புத்த குகைப் பகுதிகளில் உருவாக்கியதாக கூறி இந்நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,
- வைரலாகும் வீடியோ தாய்லாந்தில் எடுக்கப்பட்டதல்ல, அது சீனாவில் எடுக்கப்பட்டது.
- ஓம் என்ற ஒலி மட்டுமல்ல, எந்த ஒலி எழுப்பினாலும் நீரூற்று மேலே எழும்பும்.
- வைரலாகும் நீரூற்றுக்கும் புத்த துறவிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அந்த அமைப்பானது தனியார் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது.
Also Read: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?
Conclusion
தாய்லாந்தில் ஓம் என்ற வார்த்தையை மட்டும் உச்சரித்தால் மலையை விட உயரமாக நீருற்று பறப்பதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Facebook Post, from XinhuaNewsAgency
Youtube Videos from Himalaya Music Fountain
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)