பிரதமர் மோடிக்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்ட நிதியைப் பெறுவதற்காக மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மத்திய அரசு’ என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியதாகத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக சார்பில் பதவியேற்ற தருணத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டு வருகிறார். பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தன. எனினும், இதுகுறித்த வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றமும் ‘ஒன்றிய அரசு’ என்றே அழைக்கலாம் என்று அறிவித்துவிட்டது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் நிதியுதவி வேண்டும் என்பதற்காக மட்டும் ‘மத்திய அரசு’ என்று குறிப்பிட்டுள்ளதாக “அது என்ன பணம் வாங்க மட்டும் மத்திய அரசு !! பழி போடும்போது மட்டும் ஒன்றிய அரசு ??” என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றாரா வேலூர் இப்ராஹிம்?
Fact check/ Verification
பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்று குறிப்பிடாமல் மத்திய அரசு என்று நிதிக்காக குறிப்பிட்டதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்ட கடிதம் பதிவிடப்பட்டிருந்தது. அதில் முழுமையாக ஆராய்ந்தபோது அதில் ‘ஒன்றிய’ என்கிற வார்த்தையே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், செய்தித்தளங்கள் பலவும் இன்றும் மத்திய அரசு என்று குறிப்பிட்டு வருகின்ற நிலையில், குறிப்பிட்ட செய்தித்தாளும் தன்னுடைய செய்தியில் மத்திய அரசு என்று குறிப்பிட்டுள்ளது. அதனையே, முதலமைச்சர் நேரடியாக மத்திய அரசு என்று குறிப்பிட்டதாகப் பரப்பி வருகின்றனர்.
Conclusion:
பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்று குறிப்பிடாமல் மத்திய அரசு என்று நிதிக்காக குறிப்பிட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)