மயிலாடுதுறையில் இருந்து தனது தாய் மீன் கழுவி உழைத்து சேர்த்த பணத்தின் மூலமாக படித்து மருத்துவர் ஆகியுள்ள மாணவி விஜயலட்சுமி, நீட் தேர்வு மூலமாகவே மருத்துவர் ஆகியுள்ளார் என்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி. கணவரை இழந்த இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் சந்தையில் மீன்களை வெட்டி சுத்தம் செய்து கிடைக்கும் வருமானத்தில் தனது மகள் விஜயலட்சுமியை மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களை பார்வையிடச் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்கடையூரில் ஆய்வை முடித்துவிட்டு ரமணி, அவரது மருத்துவர் மகள் விஜயலட்சுமி, மகன் ரவிச்சந்திரன் ஆகியோரைச் சந்தித்து பேசினார். தொடர்ந்து, ரமணிக்கு பாராட்டுகளையும் மருத்துவப் படிப்பினை முடித்துள்ள மாணவி விஜயலட்சுமிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிலையில், குறிப்பிட்ட செய்தியை பகிர்ந்து கூடவே, “நீட்டுக்கு எதிராக நிற்பான். ஒரு ஏழை வீட்டு பிள்ளை நீட் எழுதி பாஸ் பண்ணினால் போய் வாழ்த்துகள் சொல்வான் அவன் யார்” என்பதாக பகிர்ந்து வருகின்றனர்.
ட்விட்டரில் கட்டெறும்பு என்கிற பயனர் இதனைப் பதிவிட்டதைத் தொடர்ந்து, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இது பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
மயிலாடுதுறையிலிருந்து மருத்துவர் ஆகியுள்ள விஜயலட்சுமி, நீட் தேர்வு மூலமாகவே மருத்துவர் ஆகியதாக பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
ரமணியின் உழைப்பு மற்றும் விஜயலட்சுமியின் வெற்றி குறித்து முன்னணி ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியாகியுள்ளதுடன் அவர்கள் இருவருடைய பேட்டியும் பல ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

விஜயலட்சுமி, ரஷ்யாவில் மருத்துவம் பயின்றுள்ளார் என்பதை தனது பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார்; ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. கடும் போராட்டங்களுக்கு இடையில் ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து திரும்பியுள்ள விஜயலட்சுமி தற்போது இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்வதற்கான எக்சிட் தேர்விற்காக படித்து வருகிறார்.
எனவே, நீட் தேர்வு எழுதி மருத்துவரான மாணவியை வாழ்த்தியவர் என்பதாக விஜயலட்சுமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது தொடர்பாக பரவுகின்ற செய்தி தவறான நோக்கத்துடன் பரப்பப்படுகிறது என்பது தெளிவாகியது.
Conclusion
மயிலாடுதுறையிலிருந்து மருத்துவர் ஆகியுள்ள விஜயலட்சுமி, நீட் தேர்வு மூலமாகவே மருத்துவர் ஆகியதாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: false context/Missing context
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)