தமிழக அரசின் பொங்கல் பரிசை குற்றம் சுமத்துபவர்களுக்கு நன்றி இல்லை; இலவசமாக வழங்குவதை குறை சொல்லக் கூடாது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றது.
சமீபத்தில் கூட திருப்பத்தூர், மயிலாடுதுறை பகுதிகளில் கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்று இருந்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளதை நம்மால் காண முடிந்தது.
இந்நிலையில், “பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார். ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை” என்று அமைச்சர் சக்கரபாணி கூறியதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளைங்களில் பரவி வருகின்றது.

இதேபோல், “ரேஷனில் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பரிசுத்தமானது. அரசு இலவசமாக வழங்குவதை குறை சொல்லக் கூடாது. பிடிக்காதவர்கள் வாங்க வேண்டாம்” என்றும் அமைச்சர் கூறியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் வைரலாகி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
தமிழக அரசின் பொங்கல் பரிசை குற்றம் சுமத்துபவர்களுக்கு நன்றி இல்லை; இலவசமாக வழங்குவதை குறை சொல்லக் கூடாது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக நியூஸ்கார்டுகள் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில் தந்தி தொலைக்காட்சியின் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என்பதை அறிய தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்தோம். இதில் தந்தி தொலைக்காட்சி டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
தந்தி தொலைக்காட்சியே வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்தோம். நியூஸ் 7 தமிழும் அந்நிறுவனத்தின் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்திருந்தது.
இதனையடுத்து, அமைச்சர் சக்கரபாணி அவர்களும் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது
Also Read: நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடமா?
Conclusion
தமிழக அரசின் பொங்கல் பரிசை குற்றம் சுமத்துபவர்களுக்கு நன்றி இல்லை; இலவசமாக வழங்குவதை குறை சொல்லக் கூடாது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவைகள் என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Also Read: சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம் என்றாரா அமைச்சர் சக்கரபாணி?
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)