Fact Check
பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசியதாக பரவும் பழைய வீடியோ!

Claim: பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் மோடி பேசினார்.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ ஜனவரி 02 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவுக்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா நேற்று (27/02/2024) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இக்கூட்டத்தில் பிரதமர் காலி இருக்கைகளுடன் பேசிக்கொண்டிருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!
Fact Check/Verification
பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்ததாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் @Idam_valam என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில், “திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் அருகே பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இங்கு சுமார் 9 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவே காணப்பட்டன” என்று குறிப்பிட்டு இதே வீடியோவை ஜனவரி 02, 2024 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அதேபோல் @kalgikumaru என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்திலும் ஜனவரி 02, 2024 அன்று இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடியதில் “திருச்சி புதிய விமான முனையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி” என்று தலைப்பிட்டு ஜனவரி 02, 2024 அன்று தந்தி டிவி வீடியோ ஒன்றை அதன் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் 01:10:35 நேரத்தில் பிரதமர் மோடி பேசுவது வைரலாகும் வீடியோவிலிருக்கும் வீடியோவுடன் ஒற்றுப்போவதை நம்மால் காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ சென்ற மாதம் திருச்சியில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகின்றது. ஆகவே இவ்வீடியோவுக்கும் நேற்று பல்லடத்தில் நடந்த மாநாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகின்றது.
Also Read: முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!
Conclusion
பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது சென்ற மாதம் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from the user, @Idam_valam, Dated January 02, 2024
Tweet from the user, @kalgikumaru, Dated January 02, 2024
Youtube Video from Thanthi TV, Dated January 02, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)