Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் பிரதமர் மோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நியூஸ்செக்கர் வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் ஹெல்ப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்திருந்தார்.
அப்புகைப்படத்தில்,
“அனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் Scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000மும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும்.
இந்த பதிவை தவிர்த்துவிடாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்குத் தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே.
உயர் நீதிமன்ற உத்தரவு எண்:
WP (MD) NO. 20559/2015″
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வாசகர் அனுப்பிய இத்தகவலானது சமூக ஊடகங்களில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்தே பரவி வருகின்றது.
Also Read: ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றி விடுவார் என்றாரா அண்ணாமலை?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் ஊக்கத்தொகை பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக இத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து தேடினோம். அதில் WP (MD) NO. 20559/2015 என்கிற உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிந்தது. உண்மையில் இந்த உத்தரவானது கிராமிய ஆடல் பாடல் விழாவுக்கு வருபவர்கள் மற்றும் கோவில்களுக்கு வருபவர்கள் அணிந்திருக்க வேண்டிய ஆடை குறித்த உத்தரவாகும்.
இதனையடுத்து மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் ஏதேனும் கல்வி உதவித் தொகை வழங்குகின்றதா என்று தேடினோம்.
இதில் இவ்விருவர் பெயரில் எவ்வித கல்வி உதவித்தொகை திட்டமும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதை அறிய முடிந்தது. மத்திய அரசு கல்விக்கென்று ஒரு ஊக்கத்தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது, ஆனால் இத்திட்டமானது National Means Cum Merit Scholarship என்ற பெயராலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்படி ஒரு லட்சம் பேருக்கு ரூ.12000 வழங்கப்படுகின்றது. இந்த ஒரு லட்சம் பேரும் தேர்வு முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தேடியதில் வைரலாகும் மேற்கண்ட செய்தி பொய்யானது என்று தினமலர் கடந்த 2016 ஆண்டே செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
தினமலர் வெளியிட்டிருந்த இச்செய்தியில், மேற்கண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பெற்றோர் பலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டதாகவும், இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள், ‘தகவல் போலியானது; யாரும் நம்ப வேண்டாம்’ என, தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ”மத்திய அரசு, அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. கோவில்களுக்கு ஆடை அணிந்து வருவது குறித்து, நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்த உத்தரவு எண்ணுடன், வாட்ஸ்ஆப்பில் தகவல் பரவியது தெரியவந்தது. இதுகுறித்து வாட்ஸ்ஆப்பில் மறுப்பும் வந்துள்ளது. பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜன் குறிப்பிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றாரா பாஜக நிர்மல் குமார்?
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் பிரதமர் மோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 25, 2022
Ramkumar Kaliamurthy
January 10, 2023