இந்தி திணிப்புக்கு ஆதரவு தெரிவித்து சீமான் பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் நாடு தான்.. தமிழ் பேசுறவன் எல்லாம் ஒன்னு இந்தி கத்துக்க.. இல்லேன்னா நாட்டை விட்டு ஓடு சீமான் எச்சரிக்கை….” என்று குறிப்பிட்டு அவ்வீடியோ பரவுகின்றது.
அவ்வீடியோவில், “அவரவருக்கு அவரவர் தாய்மொழி இருக்கிறது. பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. தேவையென்றால் இந்தி கற்கலாம். இந்தி மட்டுமல்ல; எந்த மொழியையும் கற்கலாம்…. நீங்கள் ஒன்றை வெளிப்படையாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டை பொறுத்த வரைக்கும் இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழக்கூடிய நிலப்பரப்புதான், இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள்தான். நாமெல்லாம் அவர்களுக்கே பொருட்டே கிடையாது” என்று சீமான் பேசுவதாய் இருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டைத் தாண்டி தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
இந்தி திணிப்புக்கு ஆதரவு தெரிவித்து சீமான் பேசியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் நேற்று ஊடகங்களுக்கு சீமான் அளித்த பேட்டி மாலை முரசு யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்பேட்டியில் (1:28 நேரத்தில்) மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வித்துறைக்கு நிதி தரப்படும் என்று மத்திய மந்திரி கூறியுள்ளார். அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அக்கேள்விக்கு, ”இது ஒரு கொடும்போக்கு, இது நல்லதல்ல. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு இறையாண்மைக்கு ஏற்றதல்ல…. (1:58 நேரத்தில்) உலகின் முதல் தொன்மையான மொழி தமிழ். சிதைந்து அழிந்து இன்று காலடிக்குள் குறுகி இருந்தாலும்… இங்கு பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் இருக்கின்றது. எங்களிடமிருந்து பிரிந்து போய் 1800 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடம், பிறகு 1600 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு, 500 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம், துளு போன்ற மொழிகள் வந்துள்ளது. இந்தி உருவாகி எவ்வளவு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? 500 ஆண்டுகள் கூட தொடவில்லை. அந்த மொழியை இந்த நாட்டின் பொது மொழியாய், அனைத்து மக்களுடைய மொழியாகவும் மாற்றிவிட எண்ணுவது எவ்வளவு பெரிய கொடுமை!
..(3:54 நேரத்தில்) தேவையில்லாமல் மும்மொழிக் கொள்கை ஏற்புடையதல்ல. ஏற்கனவே அவரவருக்கு அவரவர் தாய்மொழி இருக்கிறது. பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதோடு நிறுத்திக்கலாம். தேவையென்றால் இந்தி கற்கலாம். இந்தி மட்டுமல்ல; எந்த மொழியையும் கற்கலாம்.
…(4:38 நேரத்தில்) கட்டாயம் என்பது ஏற்படையது அல்ல. அது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பாக இருக்காது…..” என்று சீமான் பதிலளித்திருப்பதை காண முடிந்தது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு ஒதுக்க வேண்டிய நிதியை உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரடு ஒதுக்கிவிட்டார்களே என்ற கேள்வியை ஊடகவியலாளர்கள் எழுப்ப, “நீங்கள் ஒன்றை வெளிப்படையாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டை பொறுத்த வரைக்கும் இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழக்கூடிய நிலப்பரப்புதான், இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள்தான். நாமெல்லாம் அவர்களுக்கே பொருட்டே கிடையாது. குறிப்பாக நம்மளையெல்லாம்.. இப்போது என்னை அவர்கள் எப்படி வைத்துள்ளார்கள் என்று நினைப்பேன் என்றால், என்னுடைய நிலத்தின் வளத்திற்காகவும், என்னுடையை வரிக்காகவும்தான்..
நான் ஒரு உயிர். எனக்கு ஒரு உணர்வு இருக்கு. எனக்கு ஒரு உரிமை இருக்கு என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு கிடையாது. நான் ஒரு ஓட்டு. என்னுடைய வரி வேண்டும். என் நிலத்தின் வளம் வேண்டும். அவ்வளவுதான் அவர்களுக்கு. வேறு எந்தளவுக்கு நமக்கு மரியாதை இருக்கு என்று நினைக்கின்றீர்கள்? என்று பதிலளித்திருப்பதை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட அடுத்தடுத்த இரண்டு கேள்விகளுக்கு சீமான் அளித்த பதிலில் சிறு பகுதிகளை (கொட்டை எழுத்துக்களாக உள்ளவை) மட்டும் வெட்டி, அவற்றை ஒட்டி இந்தி திணிப்புக்கு ஆதரவாக பேசியதாக பரப்பப்பட்டு வருவது தெளிவாகின்றது.
Also Read: ஐபிஎஸ் தம்பதி வருண்குமார் – வந்திதா விவாகரத்து செய்ததாக பரவும் வதந்தி!
Conclusion
இந்தி திணிப்புக்கு ஆதரவு தெரிவித்து சீமான் பேசியதாக பரப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Youtube video by Maalai Murasu, Dated February 17, 2025