அவசர காலங்களில் ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகும் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது திடீரென திருடன் ஒருவன் உங்களிடம் வந்து பணம் எடுத்து தருமாறு மிரட்டினால், நீங்கள் உங்கள் ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பணம் வெளியே வராமல் பாதியிலேயே சிக்கி கொள்ளும். இதன்பின் காவல்நிலையத்திற்கு தகவல் சென்று விடும்” என்று கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பல ஆண்டுகளாக பரவி வருகின்றது.
இத்தகவலானது சமீபத்தில் தினமலரின் வாரமலரில் பிரசுரிக்கப்பட்டு, இத்தகவலுக்கு ரூ.1500 பரிசாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.



Also Read: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அவசர காலங்களில் ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகும் என்று தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சற்று சிந்தித்து பார்த்தால் இந்த வசதி சாத்தியமில்லாதது என்பதை அறிய முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் பாலிண்ட்ரோமிக் வரிசை (palindromic sequence) என்று சொல்லக் கூடிய, தலைகீழாக அழுத்தினாலும் அதே எண் வரக்கூடிய எண்ணை பின் எண்ணாக வைத்திருந்தால் இந்த வசதி அவருக்கு துணை புரியாது. அதேபோல் விளையாட்டுக்காக யாரேனும் இந்த வசதியை தவறாக பயன்படுத்தினால் காவல்துறையினருக்கு அது தேவையில்லாத சிரமத்தை தரும்.
இவ்வாறு பல நடைமுறை சிக்கல் இருக்கக்கூடிய இவ்வசதி உண்மையிலேயே உள்ளதா என்பதை உறுதி செய்ய இதுகுறித்து தேடினோம். இத்தேடலில் காஸ்பர்ஸ்கி இந்த தகவல் பொய்யானது என்பதை விளக்கி கட்டுரை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து தேடியதில், சென்னை சிறப்பு பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளர் அர்ஜூன் சரவணன் அவர்கள் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
Also Read: நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?
Conclusion
அவசர காலங்களில் ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Arjun Saravananan, Superintendent of police -II, Special Branch CID (SSB II), Chennai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)